தமிழ்க் கதைகள்

ஏப்ரல் 8, 2008

லொள்ளு

கோப்பு வகை: Cinema, Fun, லொள்ளு — வெட்டிப்பயல் @ 7:15 பிற்பகல்
Tags: , , , , , , , ,

நம்ம தமிழ்படத்துல வந்த இந்த டயலாக்குக்கு எல்லாம் இப்படி பதில் சொல்லியிருந்தா எப்படி இருக்கும்…

சிட்டிசன்:
கோர்ட் சீன்
அஜித்: அத்திப்பட்டினு ஒரு ஓர் இருந்ததே அது தெரியுமா உங்களுக்கு???
நீதிபதி: எருமைநாயகம்பட்டினு ஒரு ஊர் இருக்கே அது தெரியுமா உனக்கு???
அ: தெரியாதே…
நீ: அப்ப அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு…

காக்க காக்க:
ஜீவன்: அவளை தூக்கறன்டா… உனக்கு வலிக்கும்டா… நீ அழுவடா…
சூர்யா: அவளை தூக்கனா உனக்கு தாண்டா வலிக்கும்… ஏனா அவ 120 கிலோ

சந்திரமுகி:
பிரபு: என்ன கொடுமை சரவணன்…
தலைவர்: எது??? ஜோதிகாவ உனக்கு ஜோடியாப் போட்டதா?

ரமணா:
வி.கா: டமில்ல(Damil) எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு
மாணவர்: அது damil இல்ல கேப்டன் தமிழ்
வி.கா: அப்ப எனக்கு damilல பிடிக்காத ஒரே வார்த்தை “தமிழ்”

கௌரவம்:
சிவாஜி: கிளிக்கு ரெக்கை முளைச்சிடுச்சி… அதனால பறந்து போயிடுச்சு…
பத்மினி: ரெக்கை முளைச்சா பறந்து போகமா… பின்ன என்ன நீந்தியா போக முடியும்???

இப்பொழுதுக்கு இவ்வளவுதான் தோணுது… பிடித்திருந்தால் சொல்லுங்க அடுத்து யோசிக்கலாம் ;)

Source : http://vettipaiyal.blogspot.com/2006/08/blog-post_29.html

பெப்ரவரி 29, 2008

இன்றும்

மணி பதினொன்று. இன்றும் அலுவலகத்தில் இருந்து வர தாமதமாகிவிட்டது. அறையில் நண்பர்கள் யாரும் இல்லை. நைட் ஷோ சென்றிருப்பார்கள். படத்திற்கு போய் ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது.இன்று சீக்கிரம் வந்திருந்தால் நானும் சென்றிருக்கலாம். கிளம்பும் நேரத்தில் மேனேஜர் வந்து வேலை கொடுத்துவிட்டான். இன்று இரண்டாவது முறையாக அவனுடன் தகராறு. ஒன்று இந்த ப்ராஜெக்டில் இருந்து மாற வேண்டும் இல்லையென்றால் கம்பெனியை மாற்ற் வேண்டும். அப்போது தான் நிம்மதி. இதற்கு மேலும் இவனிடம் வேலை பார்க்க முடியாது.

அவனை மட்டும் குறை சொல்லி என்ன பயன். யாருக்கு தான் என் பேரில் அக்கறை இருக்கிறது. பெற்றவர்களுக்கே அக்கறை இல்லை. அவர்களுக்கு அக்கறை இருந்திருந்தால் நான் ஏன் கல்கத்தாவை விட்டு சென்னைக்கு வரப் போகிறேன். ஜனனியை மணக்க அவர்கள் சம்மதம் சொல்லியிருந்தால் இந்நேரம் என் வாழ்க்கை எப்படியெல்லாம் இருந்திருக்கும். அதைத் தாங்க முடியாமல் தானே கல்கத்தாவில் இருந்து இடமாற்றம் கேட்டு இப்போது சென்னையில் இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் இரண்டு பாக்கெட் சிகரெட்டில் என் சோகங்களை எல்லாம் மறந்துவிடத் துடிக்கிறேன்.

ஜனனி பத்தாம் வகுப்பில் என் பள்ளியில் வந்து சேர்ந்தாள். அவளும் தமிழ் தான். சொந்த ஊர் திருநெல்வேலி. அவள் அப்பாவிற்கு மாற்றலாகி அந்த வருடம் தான் கல்கத்தா வந்தனர். அப்போது முதல் கல்லூரி வரை ஒன்றாகவே படித்தோம். அந்த ஏழு ஆண்டுகளில் என் செயல்கள் முழுக்க முழுக்க ஜனனியை நோக்கித் தான் இருந்தது.

நான் கிதார் வாசிக்கக் கற்றுக் கொண்டதே அவளால் தான். ஒரு நாள் பள்ளியில் இருந்து இரயிலில் வீடு திரும்பும்போது எதிர் சீட்டில் ஒருவன் கிடார் வைத்திருந்தான். ஜனனி எனக்கு கிதார் வாசிக்கத் தெரியுமா எனக் கேட்டாள். அவளுக்காகவே அடுத்த நாளே கிடார் வகுப்பில் சேர்ந்து கிடார் கற்றுக்கொண்டேன்.

அதே போல் நான் கிடார் வாசிப்பதை நிறுத்தியதற்குக் காரணமும் அவள் தான். கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருந்த போது ஒரு கலை நிகழ்ச்சிக்காக மேடையில் வாசித்தேன். அன்று மாலை ஏதோ காரணத்துக்காக எங்களுக்குள் சண்டை வந்தது. அந்த ஆறு வருடங்களில் எங்களிடையே விழுந்த முதல் விரிசல். அன்று முடிவு செய்தேன். இனி கிடார் வாசிக்கப் போவதில்லை என. இப்படித் தான் பல நேரங்களில் காரணமில்லாத பைத்தியக்காரத் தனமான முடிவுகளை எடுக்கின்றோம்.

என் மாமா BARC-இல் வேலை செய்துகொண்டிருந்தார். அவர்தான் எனக்கு ரோல் மாடல். ஜனனியை மணக்க என் அப்பா எதிர்ப்பு தெரிவித்தாலும் மாமா பேசி எப்படியாவது எங்கள் திருமணத்தை நடத்தி வைத்துவிடுவார் என்ற நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் நான் இறுதி வருடம் படித்தபோது ‘ஹார்ட் அட்டாக்’கில் மாமா இறந்துபோனார். அதுதான் வாழ்க்கையில் நான் பட்ட முதல் அடி. அவர் இருந்திருந்தால் நான் ஜனனியைப் பிரிந்திருக்கத் தேவையில்லை.

அடுத்த ஆறு மாதத்தில் பாட்டியும் இறந்துபோனாள். பாட்டி இறந்த இரண்டு மாதங்களில் அப்பாவிடம் எங்கள் காதலைப் பற்றி சொன்னபோது அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஜாதி, மொழி எல்லாம் ஒன்று தான். ஆனாலும் அவர் சம்மதிக்க மறுத்துவிட்டார். பெற்ற மகனின் வாழ்க்கையில் அக்கறை இருந்திருந்தால் அப்படி செய்திருக்க மாட்டார்.

எல்லாம் சுயநலவாதிகள் தானே. அவருக்கு விருப்பமான படிப்பு, அவருக்கு விருப்பமான வேலை, இப்போது அவருக்கு விருப்பமான மருமகள் வேண்டும். எல்லாம் அவர் விருப்பம் போல் அமைய வேண்டும். ஜனனியின் வீட்டிலும் எங்கள் காதலை ஒத்துக்கொள்ளவில்லை. என்னை விட அவள் அதை எளிதாக்த் தாங்கிக் கொண்டாள்.

இதுவரையில் என் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான தருணங்களும் சோகமான தருணங்களும் ஜனனியால் வந்தவையே.

ஒரு முறை பள்ளியில் இருந்து வீடு திரும்பும்போது மழை வலுக்க நான் மூடியிருந்த ஒரு கடையின் வாசலில் ஒதுங்கினேன். சிறிது நேரத்தில் ஜனனி குடையுடன் வந்து கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் நின்று தன் குடைக்குள் வருமாறு அழைத்தாள். நான் மறுக்க “என்னுடன் குடையில் நனையாமல் வா. இல்லையென்றால் மழை நின்றபின் இருவரும் போவோம்” என அவளும் அந்த கூரையின் கீழ் வந்து நின்றுவிட்டாள். அவளுடன் செல்ல உள்ளுக்குள் ஆசை இருந்தாலும் ஏதோ ஒரு தயக்கத்தில் மழை நிற்கும் வரை அங்கேயே நின்று பேசிவிட்டு கிளம்பினோம். இது போல் எத்தனை நினைவுகள்.

கல்லூரி படிப்பு முடிந்து நான் வேலைக்குச் சேர்ந்த அதே தினத்தில் ஜனனிக்கு திருமணம். என்னையும் அழைத்தாள். திருமணத்திற்கு ஒரு வாரம் முன் போன் செய்து இரண்டு மணி நேரம் அழுதாள். திருமணத்திற்கு நான் செல்லவில்லை. அந்த அளவு என் மனதில் வலுவில்லை.

காலம் தான் எவ்வளவு வேகமாக செல்கிறது. அவளுக்குத் திருமணம் நடந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது லக்னோவில் இருக்கிறாள். அவள் திருமணத்திற்குப் பின் அவளிடம் பேசவேயில்லை. ஆறு மாதங்களுக்கு முன் அவளாக எப்படியோ என் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து அழைத்தாள். அப்போதும் என்னால் அவளிடம் பேச முடியவில்லை.அவள் நலனை விசாரித்துவிட்டு இனி எனக்கு போன் செய்யவேண்டாம் எனக் கூறிவிட்டு வைத்துவிட்டேன். அன்று இரவு அவள் திருமணத்தின் போது அழுததை விட அதிகமாக அழுதேன்.

அவள் மகனுக்கு இரண்டு வயதாகிவிட்டதாம். அவள் தோழி கீதா சொன்னாள். ஒருமுறை சென்று பார்த்துவிட்டு வரவேண்டுமென நினைக்கத் தான் முடிகிறதே தவிர கிளம்புவதற்குத் திராணியில்லை. அவள் மகனுக்கு ‘கார்த்திக்’ எனப் பெயர் வைத்திருக்கிறாளாம். சினிமாவில் மட்டும் தான் முன்னாள் காதலனின் பெயரை வைப்பார்கள் போல.

என் அப்பா அன்றே என் காதலுக்குச் சம்மதம் சொல்லியிருந்தால் இப்படி நடுஇரவில் தூக்கம் வராமல் புரண்டுகொண்டிருக்க மாட்டேன். நம் விருப்பத்தை என்றைக்கு மதித்திருக்கிறார்கள். அவர் மேல் எவ்வளவு வெறுப்பிருந்தாலும் அவரை மீறவும் மனம் வரவில்லை. கடைசி வரை நம் மேல் அக்கறை கொண்டு நமக்கு நல்லது செய்பவர்கள் யாருமில்லை.

இப்போது வேறொரு பெண்ணைக் காதலித்தால் ஒத்துக்கொள்ளவா போகிறார். அதற்கும் அவரிடம் சண்டை போடத்தான் வேண்டும். நானும் ஜனனியை மறக்க வேண்டும். எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவளுடன் ஒப்பிட்டுப் பார்க்கவே தோன்றுகிறது. முதலில் அதை மாற்ற வேண்டும்.

மணி ஒன்றாகிவிட்டது. இன்னும் நண்பர்கள் படம் முடித்து வீடு திரும்பவில்லை. விஜய் பைக்கிற்கு ஆர்.சி புக் இல்லை.

நாளை பத்து மணிக்கு மீட்டிங் இருக்கிறது. அதற்கு முன் மேனேஜரிடம் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் அளிக்க வேண்டும். இந்த ப்ராஜெக்டை திட்டமிட்டபடி இந்த மாதத்துக்குள் முடித்துவிட்டால் நல்லது. அவனிடம் நல்ல பெயர் கிடைக்கும், ரேட்டிங்கில் உதவும்.

தூக்க மாத்திரை எங்கே வைத்தேன்?

மூலம்

பெப்ரவரி 27, 2008

நேயர் விருப்பம்

அடிக்கிற வெயிலிலே காஞ்சு கருகி போயிருவோம் போலயிருக்கே’ன்னு புலம்பிக்கிட்டே தாராபுரத்து பஸ்ஸடாண்ட்’ல் நின்றுக் கொண்டுருந்தான் தனபால். தூரத்தில் யாரோ தெரிந்தவன் போல ஏதோவொரு உருவம் அங்குமிங்கும் அலைவதை பார்த்த தனபாலுக்கு யாரு’ன்னு சட்டென்னு உரைக்கவில்லை, வயதுகளின் பெருக்கத்தில் மூக்கு மேலிருக்கும் அமர்வினை எடுத்துவராத கஷ்டத்தை பஸ்ஸ்டாண்டில் நின்று பத்தடிக்கு முன்னால் நிற்கும் பஸ்ஸில் எழுத்தை படிக்க பட்ட பாட்டை நினைத்து பொறுமி கொண்டிருந்தான். அதே உருவம் தான் நிற்கும் பக்கத்தை நோக்கியே வர உற்றுக்கவனிக்க ஆரம்பித்தான். வெகுவான ஆச்சரியத்தோடு அவனை அப்பிடியே கத்திக்கொண்டே போயி கட்டிக்கொள்ளும் அளவுக்கு பாசம் உந்த அது அவந்தானா பக்கத்தில் வந்ததும் கன்பார்ம் செய்துவிட்டு செய்யலாமென வெகு உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தான்.

“அட தனா கண்னு, நீதானா அது தூரத்திலிருந்து பார்க்கிறப்போ யாரோ மாதிரி தெரிஞ்சயேப்பா! பாரு கும்பிடப்போன சாமியே நேரா வந்த கணக்கா இங்கன நிக்கிறே, ஒன்னப்பார்க்கதான் தாரப்புரம் வந்தேன்.”

இவனா இன்னும் உசுரோடதான் இருக்கானா? தான் பார்க்கிறது கனவா நிஜமான்னு வெகுவான ஆச்சரியத்திலே அவனையே பார்த்துக்கொண்டுருந்தான் தனபால்.

“என்னா இப்பிடி பார்க்கிறே? இன்னும் நான் உசுரோட இருக்கேன்னு பார்க்கிறீயா?”

“சே ச்சே, அப்பிடி இல்லடா நாகு, நாமே சந்திச்சே பத்து வருசத்துக்கு மேலே ஆகிப்போச்சே, அதுதான் கொஞ்சம் குழப்பமா இருந்தேன்.”

“நான் வேலைக்குன்னு சவுதி போயி பத்து வருசத்துக்கு மேலே ஆச்சு, ரெண்டு வருசத்துக்கு முன்னாடி அம்மா செத்தப்போ இங்க வந்தேன், அதுக்கப்புறம் இப்போதான் இங்கயே வர்றேன்.”

“என்னாது அம்மா இறந்துட்டாங்களா? அதைக்கூட சொல்ல மாட்டியா நீயி? என்னம்மோ போடா, அந்த பிரச்சினை ஆனதுக்கபுறம் நீ சொல்லாமே கொள்ளாமே ஊரை விட்டு போனதும் எனக்கு அவ்வளவு கோவம் வந்துச்சு, நீயும் நானும் நாலு வருசத்துக்கு மேல ஒன்னா இருந்தும் அந்த பிரச்சினைக்காக அப்பிடியா ஓடிப்போறது?”

“சரி நான் முடிஞ்சு போன பிரச்சினையே பத்தி பேச வரலை, ஒன்னய பார்த்து போகலாமின்னு கோயம்புத்தூரிலே இருந்து இங்க வந்துருக்கேன், பக்கத்திலே அழகா ஒரு குட்டிப்பொண்ணு நிக்கிறாங்களே? இவங்க யாரு?”

“ஹிம், இவங்கதான் என்னோட பொண்ணு, மூணாவது படிக்கிறாங்க, பேரு சவுந்தர்யா, இன்னிக்கு சனிக்கிழமை’கிறதுனாலே அம்மணிக்கு லீவு. கோயம்புத்தூர் போறேன்னு சொன்னதும் என்னையும் கூட்டிட்டு போங்கன்னு வந்தாங்க”

“அப்பிடியா இனிமேதான் போகப்போறியா?”

“இல்ல இல்ல, போயிட்டு வந்தாச்சு, இப்போதான் பஸ்ஸிலே இறங்கி வந்து நின்னுட்டு இருக்கேன், நீ அடுத்த பஸ்ஸிலே இங்க வந்து இறங்கிறே”

“சரி இங்கயே நிக்க வைச்சு பேசிட்டு இருக்கே? வீட்டுக்கெல்லாம் கூட்டிட்டு போகமாட்டியா?”

மெல்லமாய் சிரிப்பை உதிர்த்து விட்டு பஸ்ஸ்டாண்ட் வெளியே வாகனகாப்பகத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தனர் மூவரும். வரும் வழியில் தற்போது சொந்தமாக எல்க்ட்ரிக்கல் கடை வைத்திருப்பதாகவும் அதற்குண்டான ஸ்டாக் எடுக்கதான் கோவை வந்ததாகவும் நாகுவிடம் சொல்லிக்கொண்டே வந்தான் தனபால்.

“விஜி, இவந்தான் நாகராஜ், அடிக்கடி சொல்லுவேனே? அவந்தான் இவன்”ன்னு தன்னுடய மனைவியிடம் நாகராஜனை அறிமுகப்படுத்தினான்.

“நானும் இவனும்தான் ஒன்னா கோயம்புத்தூர் மில்’லே எலக்ட்ரிசியனா வேலை பார்த்தோம். கொஞ்சநாளிலே எனக்கு சவூதி’லே வேலை கெடைச்சிருச்சுன்னு அங்க போயிட்டேன்”

“ஹிம் ஒங்களை பத்தி சொல்லியிருக்காங்க, நீங்களும் இவரும் ஒன்னா திண்டுக்கல் பாலிடெக்னிக்’லே படிச்சி முடிச்சு கோயம்புத்தூர் வந்து வேலை பார்த்தது, தனியா வீடு எடுத்து தங்கினது’னு எல்லாமே சொல்லியிருக்காங்க”

தனபால் மனைவி இதை சொல்லிமுடித்ததும் சற்றே சந்தேகத்திடனே நாகராஜன் அவனை உற்று நோக்க ஆரம்பித்தான். சமையல் வேலையாய் அவள் உள்ளே போக தன்னுடைய சந்தேகத்தை கேட்டுறலாமின்னு என பேச ஆரம்பித்தான்.

“அடேய் தனா எல்லாத்தையும் சொல்லிட்டியா?”

“எல்லாமே சொல்லிட்டேன், ஆனா அந்த பிரச்சினையே மட்டும் சொல்லலை!”

“ஹிம், எப்பிடிடா இருக்கா அவ? நல்லாயிருக்காளா? சந்தோசமா இருக்கா இல்ல?”

“ஒருதடவை கோயம்புத்தூரிலே வேலை விசயமா போனப்போ அவ காரிலே போறத பார்த்தேன், என்னையே அவளும் பார்த்துட்டா போலே, கொஞ்சதூரம் போன காரை கூட திரும்ப வர்ற வைச்சி என்கிட்டே பேசிட்டு போனா, நல்லாயிருக்காளாம், பீளமேடு பக்கத்திலேதான் வீடு வந்துட்டு போங்கன்னு கூப்பிட்டா என்னாலேதான் போகமுடியல”

“ஓ, நான் அவளை பார்க்கலாமாடா?”

“இதேதான் அவளும் என்கிட்டே கேட்டா? நாகு எப்பிடியிருக்காங்க? கல்யாணம் ஆகிருச்சான்னு கேட்டா? அட நானே கேட்கமறந்து போயிட்டேன், கல்யாணம் ஆகிருச்சாடா ஒனக்கு? எங்க வீட்டை சவூதி’லே செட் பண்ணிட்டியா?”

“இல்லய்யா, அம்மாவும் எட்டு வருசமா என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி சொல்லி அலுத்து போயி செத்தே போயிட்டாங்க, நான் இப்பிடி பண்ணுறேன்னு அக்காவும் என்கிட்டே பேச்சை நிப்பாட்டி வருசத்துக்கு மேலா ஆகிப்போச்சு, ஒட்டு சொந்தமே என்னை புரிஞ்சுக்கலை, நான் என்ன பண்ணுறது?”

“ஹிம் என்னதான் பெரிய வருத்தமிருந்தாலும் நாப்பது வயசு வரைக்கும் கலியாணம் பண்ணாமலே’வா இருக்கிறது?”

“என்னாடா பண்ணச்சொல்லுறே? மறக்க முயற்சி பண்ணாலும் முடிய மாட்டங்கிதே? எங்க விசயம் அவங்க வீட்டுக்கு தெரிஞ்சு அவ அப்பா ரோட்டிலே வைச்சி என்னை தாறுமாறா திட்டுனது? நம்ம வேலை பார்த்த மில்’க்கே வந்து அவங்க அண்ணனுங்க அசிங்கமான வார்த்தைகள் எல்லாம் பேசி சண்டை போட்டும் அவளை மட்டும் என்னாலே மறக்கமுடியலை’யேடா!”ன்னு கண்ணோரத்தில் எட்டிப்பார்த்த ஈரத்தை மெல்லமாய் துடைத்து கொண்டான்.

“நாகு எனக்கு புரியுதுடா,, அதுக்காக நீ கல்யாணமே பண்ணிக்காமே இருக்கிறது நல்லாவா இருக்கு? இப்போ உனக்குன்னு இருந்த அம்மாவும் இல்லை, அக்காவும் பேசுறது இல்லன்னு சொல்லுறே? அப்போ வர்றப்போற காலங்களிலே ஒனக்குன்னு யாருடா இருக்கா?”

“எல்லாம் விதி படியே நடக்கட்டுமின்னு நானும் அதுப்படியே போயிட்டு இருக்கேன்”

“அப்பா அப்பா, நான் கேட்ட பாட்டை சூரியன் FM’லே போடுறாங்கப்பா’ன்னு சந்தோசமாக ஓடி வந்தாள் தனபால் மகள்

“என்னாடா இன்னுமா ரேடியா’லே நேயர்விருப்பம் போடுறாங்க”ன்னு ஆச்சரியத்தோடு கேட்டான் நாகு.

“ஆமாம், இப்போ FM ரேடியோ வந்ததுக்கபுறம் அந்த விருப்பம் இந்த விருப்பமின்னு போனிலே பேசி தள்ளுறாங்க! நம்ம காலத்திலே போஸ்ட் கார்ட்’லெ எழுதி போட்டு தினமும் சாயுங்காலம் இன்னிக்காவது நம்ம பேரை சொல்லி பாட்டு போட்டுருவாங்களான்னு காத்து கெடப்போமே”

“நீ இதை சொன்னதும் தேவி நினைப்புதாண்டா வருது. தினமும் பத்து கார்டு அனுப்புவாளே? ஒருதடவை என் பெயரையும் அவ பேரையும் சேர்த்து எழுதி காதலான தேவி, உன்னை சுற்றும் ஆவி பாட்டு வேணுமின்னு எழுதி போட்டிருக்கேன்னு சொன்னா, அது வந்துச்சான்னுகூட தெரியல.”

“ஆமாம் இந்த நேயர் விருப்பம் கேட்கிறதுலே அவதானே தீவிரமா இருப்பான்னு சொல்லுவியே? நாமே தங்கியிருந்த வீட்டுக்கு பக்கத்திலே இருந்தாலும் என்கிட்டே ஒருநாளும் பேசினது இல்லை. எப்பாவது நீயும் நானும் வெளியே போயிட்டு வந்தாலும் என்னை பார்த்தாலே அமைதியா போயிருவாளே! எப்பிடிடா லவ்’லாம் பண்ணீங்க, அதுவும் பாட்டெல்லாம் நேயர்விருப்பத்திலே போடுற அளவுக்கு பேசினீங்க?”

“அதெல்லாம் எப்பிடியோ பேசுவோம்.அவளுக்கு இளையராஜா’ன்னா ரொம்ப பிடிக்கும்,அதுவும் கார்த்திக் நடிக்கிற படத்துக்கு இளையராஜா மீயூசிக்’ன்னா ரொம்பவே விரும்பி கேட்பேன்னு சொல்லுவா! பனிவிழும் மலர்வனம் ரேடியோ’லே நேயர்விருப்பத்திலே வந்துச்சுன்னா அதிலே இவ பேரு கண்டிப்பா இருக்கும்.”

“ஹிம் அவ சொன்னாதானே நீயி மூக்குக்கு கீழே கொஞ்சமா மீசைய சேவ் பண்ணிட்டு திரிஞ்சே, இப்போ என்னாடா’ன்னு காட்டான் மாதிரி கட்டு மீசை வைச்சிட்டு திரியிறே. “

“ஆமாம் அவளுக்கு கார்த்திக் பிடிக்கிறதுக்காக அப்பிடி இருந்தேன். இப்போதான் நான் தேவதாஸ் ஆகிட்டேனே? ஆனா சரியா ரோமக்கட்டு இல்லாதுனாலே தாடிதான் சரியா வரமாட்டேங்கிது”

“இன்னும் அந்த நக்கல் பண்ணுற பேச்சை விடலடா”ன்னு பேச்சுக்கு சொன்னாலும் அவனுடைய கண்கள் பனிக்க எத்தனிக்கும் தருணத்தையும் கவனித்தான் தனபால்.

“தனா நான் இங்க வந்ததே ஒன்னய பார்க்கிறதுக்கும் முக்கியமா அவளை பார்த்து விசாரிக்கிறதுக்கும் தான் வந்தேன். அவ வீட்டு அட்ரஸ் தர்றியா? நான் ஒருக்கா அவளை பார்த்துட்டு வந்திறேன்.”

“அட்ராஸ்தானே தர்றேன். அதுக்கு முன்னாடி நான் இந்த எட்டு ஒன்பது வருசமா அனுபிவிக்கிற கொடுமையே நீயும் அனுபிவிக்கனும்”

“என்னடா அது”

“அட ஒன்னுமில்லடா, அம்மணி சாப்பிட்க்கூப்பிடுறாங்க, வா போயி சாப்பிடலாம்.”

“சரி அப்போ நான் அவளை பார்க்கிறதுக்கு ஒனக்கு ஒன்னும் ஆட்சோபணை இல்லைலே?”

“ஹிம் அதெல்லாம் இல்லை, நீ தாரளமா போயி பார்த்துட்டு வா, இப்பவே சாப்பிட்டு போயிட்டு கூட வா, நான் சாயுங்காலமா சென்னை போறேன், நீயும் என்கூட வந்தேன்னா எனக்கு கொஞ்சம் துணையா இருக்கும். ஒரு பல்ப் கம்பெனிகாரன் டீலர்ஷிப் தாரேன்னு சொல்லியிருக்கான், அவனை போயி பார்த்து பேசனும்.”

மதிய உணவிற்கு பிறகு தனபாலிடமிருந்து அட்ரஸ் வாங்கிகொண்டு திரும்ப வர்றேன்னு கிளம்பி போனான் நாகராஜன். தேவியின் வீட்டை போளூர்’ல் கண்டுபிடிப்பதற்கு பெரிதாக எல்லாம் சிரமமபடவில்லை அவன். வீடு என சொல்லுவதை விட பெரிய பங்களா போலே இருந்தது, தயங்கி தயங்கி அங்கே போயி வெளியே நின்ற கூர்கா’விடம் தேவியை பார்க்க வேண்டி அவளுடைய அனுமதிக்கு பிறகு வீட்டுக்குள் சென்றான் நாகராஜன். பத்து வருடத்துக்கு முன்னர் பார்த்த அதேமாதிரியே இருந்தாள் தேவி. இன்னமும் படிய வாரிய கூந்தலும், மல்லிகை பூவும், மேல் நெத்தியில் சந்தனகீற்றும், இரு புருவங்களுக்கு சற்றே மேலே விரல் நுனி அளவு குங்குமமும், இப்பொழுது சற்று புதிதாக உச்சி நெற்றியிலும் குங்குமமும் வெகுபாந்தமாய் இருந்தாள். பேசுவதற்கு எந்த வார்த்தை கொண்டு ஆரம்பிப்பது’னு இருவரும் தடுமாற இருவர் வாயிலும் நல்லாயிருக்கியான்னு வந்து உதிர்த்தது.

“நான் நல்லா இருக்கேன் தேவி… நீ எப்பிடியிருக்கே? ஒன்னோட புருசன் என்ன பண்ணுறாரு?”

“எனக்கென்னா நான் மகாராணியாட்டாம் இருக்கேன், அவரு இங்க வாட்டர் பம்பு மேன்பாக்சரிங்க் பண்ணுற பிஸினஸ் பண்ணிட்டு இருக்காரு. நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?”

“நான் சவூதி’லே ஒரு கம்பெனியிலே எலக்ட்ரிகல் டிபார்ட்மெண்ட்’லே இருக்கேன். லீவு’லே இங்க வந்தேன். வந்த இடத்திலே தனா’வே பார்க்கலாமின்னு வந்தேன். அவந்தான் ஒன்னோட அட்ரஸ் கொடுத்தான், அப்பிடியே பார்த்துட்டு போலாமின்னு வந்தேன்.”ன்னு கிட்டத்தட்ட இரண்டுமணி நேரமாய் மனதிற்குள் என்ன பேசவேண்டுமென நினைத்தை அப்பிடியே அவளிடம் ஒப்பித்தான். எந்தவொரு சூழ்நிலையிலும் கண்கள் கலங்கிட கூடாது. வார்த்தைகள் வர கஷ்டப்படும் அளவுக்கு போயிறக்கூடாது’ன்னு உறுதியாக இருந்தான்.

“நீங்க முன்னப்பார்த்த மாதிரியே அப்பிடியே இருக்கீங்க, மீசைதான் பெருசா வைச்சிருக்கீங்க. இப்போ வந்த அம்மணிக்கு இப்பிடியிருக்கிறதுதான் பிடிச்சிருக்கா என்னா’ன்னு கேட்டு வெகுளியா சிரித்தாள் தேவி. ஆனால் இவனுக்குதான் கஷ்டமாக இருந்தது. இவனது முகம் போன போக்கை கவனித்த அவள் பேச்சை மாற்ற முற்பட்டாள்.

“இப்போல்லாம் கூட நான் நேயர் விருப்பத்துக்கு லெட்டர் அனுப்பிட்டு தான் இருக்கேன். முன்னாடி ஒரேயொரு கோவை ரேடியாதான், ஆனா இப்போ டிவி,FM ரேடியோ’ன்னு எல்லாத்திலேயும் இது போடுறாங்க இல்லே, எல்லாத்திலையும் லெட்டர் அனுப்பிட்டுதான் இருக்கேன்’ன்னு சொல்லி சிரிக்க ஆரம்பித்தாள். இன்னமும் அவளிடம் நிறையவே பேசவேண்டுமென நினைத்தாலும் நேரம் நெருங்க ஆரம்பித்ததும் தனா என்னை சென்னைக்குகூட வர சொல்லி கூப்பிட்டு இருந்தான். நான் கிளம்ப வேண்டியதா இருக்கு’னு சொல்லி அந்த இடத்தை விட்டு கிளம்பினான் நாகு.

கோயம்புத்தூர் பஸ்ஸ்டாண்ட்’லில் இருந்து சென்னை போகும் பஸ்க்கு அருகில் வெயிட் பண்ணுவதாக தனபால்’க்கு போன் செய்தான். இரவு பஸ் பயணத்திடனுடயே “நாகு தேவியை பார்த்து பேசினியா என்னா சொன்னா?’ன்னு கேட்ட தனபாலை கலங்கிய கண்களோடு பார்த்தான் நாகு.

“ஹிம் நல்லா இருக்காடா! அவ்வளவு பெரிய வீட்டிலே மகாராணியாட்டாம் இருக்கேன், சந்தோசமா இருக்கேன்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லிட்டே இருந்தா, இன்னமும் நேயர் விருப்பத்துக்கெல்லாம் லெட்டர் போடுறதா சொல்லிட்டு இருந்தா”

“அப்புறம் என்னாடா, நீ எதுக்கு அப்செட் மூடு’லே இருக்கே? இன்னமும் அவ நேயர்விருப்பத்திலே கேட்கிற பாட்டெல்லாம் ஒன்னாலே அவ பெயரோட கேட்கமுடியலன்னு வருத்ததிலே இருக்கியா? இப்பவே சொல்லு, இப்பவே நைட்’லே கூட நேயர் விருப்பம் வருது அதிலே அவ பெயரை சொல்லி பாட்டு போட சொல்லிருவோம்.”

“உனக்கு என்ன பதில் சொல்லுறதுன்னே தெரியல’டான்னு குலுங்கி குலுங்கி ஆரம்பித்தான் நாகு.

“டேய் டேய் எதுக்கு அழுவுறே? இது பஸ்’டா, எல்லாரும் ஒருமாதிரியா பார்க்குறாங்க, என்னா ஆச்சு’னு சொல்லு”

“தனா தனா, கிளம்புறப்போ என்னை விட்டு தூரமா நின்னுட்டு அவ்வளவு நேரமா சிரிச்சிட்டு இருந்தவா அழவே கூடாது’ன்னு அவளோட உணர்ச்சிய கட்டுப்படித்திக்கிட்டு…” சொல்லி விசும்ப ஆரம்பித்தான் நாகு.

“தேவி அப்பிடி என்னாதான் சொன்னா?”

“ம்ம்..ம்ம்…ஒங்க பேரு வைச்சி கூப்பிட எனக்கொரு புள்ள இல்லாத அபாக்கியசாலியா இருக்கேன்னு சொல்லி கண்ணுலே தண்ணி வந்து அதை அடக்கமுடியாமே உள்ளே ஓடிட்டா”ன்னு சொல்லி இன்னும் சத்தமாக அழ ஆரம்பித்தான் நாகு.

இந்த மனநிலையிலிருக்கும் நாகுவை என்ன சொல்லி தேற்றுவதுன்னு வெகுவான குழப்பதின் உச்சியில் அமைதியானான் தனபால்.பஸ்ஸில் இரவு நேரத்தில் கசியும் பாடலில் காதலான தேவி, உன்னை சுற்றும் ஆவி ஒலிக்க ஆரம்பித்தது.

டிசம்பர் 22, 2007

செப்புத் தாழ்ப்பாள்

கால்தடங்களை அழித்து செல்லும் கடல் அலையென,தன் மனதில் பதிந்த தடங்களை அழித்து செல்லதொரு வல்ல பெரும் ஆழி பேரலைய எதிர்நோக்கி அக்கணமே இந்த குப்பையுடலில் உயிர் என்று ஒன்று இருந்தால் அது தெறித்துவிட்டொழிய வேண்டுமென மனதோடு அந்த புளியமரத்தை வெறித்து பார்த்து கொண்டுருந்தான் வேலு. பெண்ணொருத்தி ஆணின் மீது செலுத்தும் அன்பு எப்பிடியிருக்குமென முழுவதையும் உணர்த்தவனாய், பரந்து விரிந்த மலர்ந்த அழகுமலரென்றின் நடுநாயகமாக நின்று தன்னை சுற்றி அந்த மலரின் இதழ்களெனும் வெளிவட்டம் என்ற காதல் வளர்ந்ததை நினைத்து பார்க்கல்லான்.

“ஏண்டியவளே கனகுமணி? இங்கன பாரு அஞ்சு ரூவா’வே கிழே போட்டுட்டு போயிட்டு இருக்கே?”

“அடியாத்தி! என்னோட செவத்த மச்சானே! ஒன்னோட கரிசனம் எனக்கு ஒன்னும் வேணாம்ய்யா! நீ என்னத்துக்கு காசை கிழே போட்டு வைச்சிருக்கேன்னு எனக்கு நல்லாவே தெரியும், எனக்கு ஒன்னும் தேவையில்ல அந்த காசு.”

“சிறுக்கி, என்னத்துக்கு போட்டு வைச்சிருக்கோம் நாங்க! நீ முன்ன போறியே? காசு இங்கன கிடக்கே, அப்போ அது ஒன்னோடதுதான் நினைச்சி கூப்பிட்டேன்.”

“பொய் கோழி மாமா, எனக்கு எதுக்குன்னு நல்லாவே தெரியும், நான் பாவாடை சட்டையிலே வந்திருக்கேன், காசு எடுக்க நான் குனிய நீ என்னத்த பாக்க அலையுறேன்னு நல்லாவே தெரியும், செவனேன்னு கெட’மாமேய்.”

“ஹிம் நீ வெசயம் தெரிஞ்ச வெச காரிடி! பட்டப்படிப்பு படிக்க போறேன்னு தெனக்கும் சுடிதார் மாட்டிகிட்டு மருத போறே? நானும் அதை படிச்சு கிழிச்சு ஒன்னத்துக்கும் வக்கிலாமே பொட்டிக்கடை வைச்சிட்டு இருக்கேன். நீ படிச்சு என்னத்த கிழிக்க போறே? கழுதவயசு ஆகிப்போச்சிலே,இங்கன இருக்கிறப்பயாவது தாவணி கட்டவேண்டியது தானே?”

” ஒங்கடைக்கு பட்டதாரி கடன் வாங்கினமாதிரி ஒன்னோட கடைக்கு எதிர்க்க நானும் போட்டிகடை ஆரம்பிப்பேன். நீ என்ன எனக்கு தாலி கட்டப்போறவனா? ஒனக்கு பிடிச்சமாதிரி ஒடை உடுத்திட்டு நான் வர்றதுக்கு?”

“என்னய தவிர வேறயாருடி ஒன்னை கட்டப்போறது?”

“ஆத்தி ஒங்கப்பன் வெசப்பல்லுகாரனை மிஞ்சி நீ என்னத்தயாவது செஞ்சுட போறியா என்ன? அந்த பெருசு வெவசாயம் பண்ணுறேன்னு நிலத்தை உழுதது போக அடுத்தவங்ககிட்டே பேசுறேன்னு உசுரை வாங்கிட்டு திரியுது!”

“அப்போ எங்கப்பனை போட்டு தள்ளிறலாமா? சொல்லு எம்மாமன் மவளுக்காக அதைக்கூட செஞ்சுப்பிடலாம்”

“ஆத்தி எனக்கெதுக்கு கொலைகாரபுருஷன்! வேணுமின்னா அது நாக்கை மட்டும் துண்டிச்சிரு அது போதும்”

“ஏண்டி, ஒன்னை கட்டிக்க எங்கப்பனை நான் கொல்லனும்,இல்லன்னா அது நாக்கை வெட்டனுமா? அப்பிடியொன்னும் எனக்கு நீ தேவையில்ல போடி, எனக்கு அம்புட்டு பெரியமதிப்பு பிடிச்ச கெரக்கி இல்ல நீயி”

“அய்யோ, வேணாமின்னுதான் நான் எந்த பக்கம் போனாலும் பின்னாடியே வர்றியாக்கும், ஒங்கப்பன் எங்க வீட்டோட பேச்சை நிப்பாட்டி இருவது வருசமாகியும் நீ மட்டும் எங்க வீட்டுக்கு ஈ’ன்னு பல்லுளிச்சுட்டு போறதுக்கு என்னத்தய்யா காரணம்?”

“ஆமா… ஊருக்குள்ளே பொட்டைப்புள்ளய கலியாணம் பண்ணிக்க ஆளு இல்லாட்டியும் நான் அதை செஞ்சு தியாகி வாழறதுக்கு தயாரா இருக்கேன்னு ஒங்கப்பன்’கிட்டே சூசகமா சொல்லுறதுதான்”

“ஆமாம் ஒன்னோட தியாகத்தை நினைச்சி நம்ம திருமங்கலம் ஊரு மத்தியிலே சிலை வைக்கலாமின்னு ஊருக்காரங்க எல்லாரும் கூடி பேசிட்டு கெடந்தாங்க…”

“ஒன்னை மாதிரி தொணத்து பிடிச்சவளை கட்டுனா எனக்கு தியாகி பட்டந்தாண்டி கிடைக்கும் அப்புறம் செலையும் வைக்கதான் செய்யுவாங்க. சீக்கிரமே அந்த பட்டம் எப்போ கிடைக்குமின்னுதான் ஒன்னோட மாமன் காத்து கெடக்கான்”

“அப்பிடியே காத்து கெட”ன்னு சொல்லிவிட்டு விடுவிடுவென வாய்க்கா ஓரமாக ஓடிச்சென்று மறைந்தாள்.

கனகமணியின் தாய்மாமன் மகன் தான் முத்துவேல், இவள் பிறந்த அன்றே பிரசவத்தில் இவளது அம்மா இறந்து போனதும், எந்தங்கச்சிய நீ சரியா கவனிச்சுக்கலை, அதுதான் செத்து போயிட்டான்னும், என்னோட பொண்டாட்டிய பிரசவத்துக்கு நல்ல வைத்தியம் பார்க்கலை’ன்னு மச்சினன் மச்சினனுக்குள் சண்டை வந்து அன்றிலிருந்து பேசிக்கொள்வது கிடையாது.

“என்னடி அதிசயமா இன்னிக்கு தாவாணிதுணிய உடுத்திக்கிட்டு திரியுறே?”ன்னு கேட்ட அப்புத்தா’வை பார்த்து வெக்கசிரிப்பை உதிர்த்தாள் கனகு.

“அப்பத்தா, நம்ம தோட்டத்திலே கொஞ்சம் மல்லிய பறிச்சு நாரு கட்டி கொடு, நான் தலைக்கு வைச்சிக்க போறேன்.”

“முத்து மாமா, ஒன்னோட கடையிலே தங்கசங்கிலி வியாபாரம் பார்க்கிறியாமே? எனக்கு அரைகிலோ’லே கயித்து சங்கிலி செஞ்சு கொடேன்.”

“ஏண்டி வாயாடி, நக்கலா? பொட்டிக்கடையிலே தங்கம் வேணுமா ஒனக்கு? என்னிக்கும் இல்லாத திருநாளா தாவணி கட்டிக்கிட்டு வந்துருக்கே? அதை என்கிட்டே காட்டதானே வந்துருக்கே! புதிய வார்ப்புக்கள் வர்ற ரத்தி மாதிரியே இருக்கே? அவளே மாதிரியே அந்த கம்பத்துக்கு பின்னாடி ஒளிஞ்சுக்கிட்டு லேசா மொகத்தை மட்டும் காட்டிகிட்டு நில்லு, நான் சொன்னது சரியா இருக்கும்…. “

“ஆத்தி, என்னை பார்த்தா வேஷக்காரி மாதிரியா இருக்கு? எவ்வளோ ஒருத்தி நடிக்கிறதுக்காக செஞ்சத என்னைய வைச்சி ஒப்பிட்டு பார்க்கிறியா? ஒங்கிட்டே பேசவே மாட்டேன்”

“ஏண்டி கோச்சிக்கிறே? சும்மா வெளையாட்டுக்கு சொன்னேன், இது ஒனக்கு நல்லாயிருக்கு, இனிமே தெனக்கும் இதேயே போட்டுக்கிட்டு படிக்க போ! ஹிம் ஒன்னோட வண்டி வந்துருச்சு, ஓடி போயி ஏறிக்கோ!”

கல்லூரி பேருந்திலும் இவளை அதிசயமாக பார்த்த தோழிகளிடம் வெக்க சிரிப்பை மட்டும் உதிர்த்து மெளனமாகவே இருந்தாள்.முத்து மாமனுக்கு பிடித்த இந்த உடையை தான் தினமும் உடுத்தவேண்டுமென்று தினமும் அதேமாதிரியே கல்லூரி சென்று வந்தாள். ஒரு நாள் மாலை நேரத்தில் கல்லூரி முடிந்து நண்பர்களோடு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த பொழுது முத்துவின் தந்தை மருதய்யன் எதிர்ப்பட்டார். எப்போழுதும் நேராபார்த்தாலும் ஒரு முறைப்பு பார்வையோடு பார்த்து செல்லும் மாமா இன்று தன்னிடம் பேசவேண்டும் என நோக்கில் வருவதாய் தோன்றியதும் கனகமணியே பேச்சை ஆரம்பித்தாள். பெருசு கொஞ்சம் எடக்கு பிடிச்சதுதான் அதுனாலே கொஞ்சம் எச்சரிக்கையாகவும் பேசவேண்டுமென்னு மனதுக்குள் நினைத்து கொண்டாள்.

“மாமா, நல்லாயிருக்கியா?”

“இருக்கேன், இருக்கேன்…. ஏனாத்தா இப்போல்லாம் தாவணியும்,கை நிறைய வளையலும்,தலையிலே பூவும் வைச்சிட்டு சுத்திருயே? என்னோட பையன் கடையிலே தெனமும் போறதா ஊருசனம் சொல்லி கேட்டேன். இப்பிடியெல்லாம் ஆளை அடிக்கிறமாதிரி உடை உடுத்திக்கிட்டு எம்மவனே மயக்கிறாலமின்னு திரியுறீயா?”

“என்ன மாமா ஒரேடியா பேசிட்டு போறே? நான் இது போடறது பிரச்சினையா? இல்ல ஒன்னோட மவன்கூட பேசுறது பிரச்சினையா?”

“என்னது நான் அதிகமா பேசுறேனா? நீதான் பொட்டகழுத படிக்கப்போறேன்னு சொல்லி தெனமும் ரெண்டு பயலுக கூட திரும்பி வர்றே? இதேமாதிரி என்னோட மவனையும் வளைச்சு போட்டுறாலாமின்னு நினைச்சிக்காதே, இந்த தேவிடியாதனமெல்லாம் வேற எங்கயாவது வைச்சிக்கோ!”

இந்த அமிலம் கக்கும் வார்த்தைகளை கேட்டு என்ன செய்வது என்று புரியாத கனகு விருவிருவென அங்கயிருந்து ஓடிவிட்டாள். வார்த்தைகளின் அவமானம் பொறுக்காதவள் இந்த புளியமரத்தில் தான் கயிறு மாட்டிக்கொண்டாள். ஐயோ ஆத்தா அம்மா’ன்னு ஊரே ஒப்பாரி வைத்து கொண்டு ஓடிய பொழுது என்ன ஏதோ என்று சென்று பார்த்த வேலுவின் விரக்தியின் உச்சத்தில் மனதளவில் செத்து போனான்.

பலவகையான சோகங்களும் மனதை வேதனைப்படுத்தி கொண்டுருக்க உச்சி வெயிலின் கோரத்திலும் அந்த புளியமரத்தினை உத்து கவனித்து கொண்டுருந்தான். தான் நின்று கொண்டிருந்த பரந்துவிரிந்த மலர் பரப்பின் வெளிவட்டம் உதிர்ந்து, சுருங்கி, பாதம் நொறுங்கி விழுந்த அந்த கணத்தை இப்பொழுது உணர்ந்து கொண்டுந்தான். தேக்குமரத்தில் பதிக்கப்பட்ட் செப்புத்தாழ்ப்பாள் கழண்டு விழுந்து ஏற்படுத்திய பள்ளமான வடுவாக கனகுவின் எண்ணம் அவன் இதயத்தில் வலித்து கொண்டுருந்தது.

கனகு’வை கொன்ற தன் அப்பனை என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாமல் இந்த ஊரை விட்டு போனவன் ஒரு முறை கூட இந்த பக்கம் எட்டிப்பார்க்க வில்லை. பாவம் செய்த தன் தந்தைக்கு தன்னால் கொடுக்கமுடிந்த தண்டனையாக தன்னை அவன் கண்முன்னாலும் காட்டி கொண்டது இல்லை.தன்னுடைய அக்காவிடம் தொலைபேசியோ இல்ல கடிதப்போக்குவரத்தோ இருக்கிறதுனாலே இவன் உயிரோடு இருப்பதாக அவன் அக்காவும் அந்த ஊரும் நம்பியது. இப்போழுதுகூட அக்கா தனக்கு ஒடம்பு சரியில்லை, என்னாயாவது கொஞ்சம் பார்த்துட்டு போடா’ன்னு கெஞ்சி கேட்டதுனால்தான் ஊருக்கு வந்திருந்தான், ஆனால் அக்காவோ தன்னை ஏமாற்றியதும் அப்பன் ஊசுரு ரெண்டு நாளாக இழுந்து கொண்டிருப்பதும் தெரியவந்தது. இந்த இரண்டு நாட்கள் முழுவதிலும் புளியமரத்தை காணவே நேரத்தை செலவழித்து கொண்டுருந்தான். நினைவலைகளில் பலவகையாக அவனை அலைகழித்து கொண்டுந்த தருணத்தில் சிறுவன் ஒருவன் ஓடிவந்து மாமா மாமா, ஒங்கப்பன் செத்து போயிருச்சு, ஒன்னயா சீக்கிரம் அம்மா வரச்சொன்னுச்சு’ன்னு சொல்லி ஓடிவிட்டான். வெயிலின் கொடுமையில் தலையிலிருந்து பாதம் வரை வியர்வை ஆறாக பெருக்கெடுத்து ஓடிக் கொண்டு கண்களுக்கு கீழே மட்டும் வறண்ட பாலைவனமாய் இருக்க மெதுவாக வந்து வீட்டு திண்ணையில் வந்து அமர்ந்தான் வேலு.

“வேலு வந்துட்டான்ப்பா, இனி ஆகுற காரியத்தை பாருங்க, கடைசி ரெண்டு மாசமா அந்தா இந்தா’ன்னு இழுத்துக்கிட்டு இருந்த உசுரு இன்னிக்குதாய்யா போயி சேர்த்துருக்கு, ரொம்ப நேரத்துக்கெல்லாம் இதை வைச்சிருக்க முடியாது. சீக்கிரம் பாடைய கட்டுங்க”ன்னு அடுத்த வீட்டு பெரியவர் சத்தம் போட்டு கொண்டுருந்தார்.

உள்ளே அக்கா மெல்லமாய் விசும்பி கொண்டுருந்தாள். நாலு மாரடிப்பவர்கள் குய்யோ முய்யோன்னு சத்தம் அலறிக்கொண்டுருந்தனர். சேதி கேட்டு கொஞ்சம் கொஞ்சம் கூட்டம் சேர ஆரம்பித்தது. வந்தவர்கள் யாரும் இவன் கையை பிடித்து ஆறுதல் சொல்லவந்ததாக தெரியவில்லை. எப்பவோ விழவேண்டிய பொணம் இன்னைக்கு விழுந்துருக்கு, அத பார்க்க வந்துருக்கோம்’ன்னு திரிந்து கொண்டுருந்தார்கள்.

“ஏம்பா, இவனுக எரிக்கிற சாதிசனமாச்சே, அப்பன் மேலே இருக்கிற கோவத்திலே அவனுக்கு கொள்ளி வைப்பானா இந்த வேலு பையா”ன்னு மெதுவா கேட்டார் தலையாரி.

“ஏய்யா, இப்பிடி சொல்லுற பெத்த பிள்ள கொள்ளி வைக்காமே வேற யாரு வைக்கிறது?” என்ன வேலு சொல்லுறே? நீ கொள்ளி வைப்பே’ல்லே?ன்னு கேட்ட பெரியவர் முகத்தை கூட ஏறெடுத்து பார்க்கவில்லை வேலு.

“அப்பே, பெரும் தண்டனையா அவனுக்கு அந்த சாமியே கொடுத்துருச்சுப்பா, நீயும் மூணு வருசமா ஊருக்குள்ளே வர்றாமே அவனை பார்க்கமே இருந்துன்னு அவன் உசுரை பாதியா கொன்னுட்டே, இன்னமும் கொள்ளி வைக்காமே’ல்லாம் செத்த ஒங்கப்பனை கொடுமைப்படுத்தியிறாதே சாமி, வைக்கிறேன்னு ஒத்த வார்த்தை சொல்லிரு ராசா’ன்னு கேட்ட பெரியவர்க்கு சரி என்பது போலே தலையாட்டினான் வேலு.அடுத்த அரைமணி நேரத்திலே பாடை கட்டி சுடுகாட்டுக்கு எடுத்து வரப்பட்டு சிதை மூட்ட எல்லா வேலையும் நடக்க ஆரம்பித்தது. வேலுவின் மீசை செரைக்கப்பட்டு பானை சுத்தி ஒடைக்கப்பட்டு கொள்ளி கட்டைய வேலுவின் கையில் கொடுத்தான் வெட்டியான்.இவ்வளவு நேரமும் கண்கள் என்னும் இரண்டையும் இரும்புதிரை கொண்டு முடியிருந்தவன், மெல்லமாய் அதில் நீரை சுரந்து கண்கள் பனித்து தலைபகுதி எரு மேல் வைக்கப்பட்ட சூடத்தில் தீ முட்டினான்.

நேற்று அப்பன் அரைகுறை உசுருலும் தன்னை கூப்பிட்டு காதருகே ஒனக்கு நான் பண்ணின பாவத்துக்கு என்னை மன்னிக்கவே மாட்டேன்னு நல்லாவே தெரியும். நீ கொள்ளி வைக்காமே எங்கட்டை வேகாது, ஆனா அதை நீ செய்யமாட்டே! ஒங்காத்தா பத்தினினா எனக்கு கொள்ளி வைடா என சொன்ன அந்த விஷக்காரனின் வார்த்தை சாமர்த்தியத்தை நினைத்து வெறுத்து சுடுகாட்டிலிருந்து நடக்க ஆரம்பித்தான் வேலு.

(சர்வேசனின் நச் என்று ஒரு கதை போட்டிக்காக மற்றும் கொத்ஸ், CVR ஆகியோர் வழியில் ஆங்கில கலப்பில்லாமல் எழுதிய முயற்சி….)

நவம்பர் 29, 2007

காமக் கடும்புனல்

ஆபிஸிலே லேட்டாகி வெறுப்போட உச்சக்கட்டத்துக்கு வந்து பைக் ஸ்டார்ட் செய்ய வந்தால் டயரு பஞ்சராகி கிடந்தததில் வாழ்க்கையை வெறுத்து போயி ஆட்டோ’விலாவது வீட்டுக்கு போலாமின்னு பேஸ்மண்ட்லிருந்து வெளியே வந்தான் முருகேஷன். பெங்களூரூ வாழ் IT கூலிகளுக்கு இருக்கும் அதே அழகு களையான முகத்தை வைத்து கொண்டு MG ரோட்டிலில் நின்று கோரமங்களா பர்த்தீரா’ன்னு கெஞ்சி கொண்டிருந்தான். மாலை ஆறு மணிக்கு ஆரம்பித்து ஒன்பது மணி வரையும் இந்த ஆட்டோகாரர்கள் செய்யும் அலும்பை நினைத்து கொண்டு ஒவ்வொருத்தராய் கேட்டும், ஒருத்தனும் நிக்காமால் அதுவும் நின்றுக்கூட எங்க போகனும் கேட்காமலே கண் புருவத்தை உயர்த்தி கேட்டு அங்கயா? அங்க நான் வரலை’கிற மாதிரி ஒவ்வொரு ஆட்டோவா நகர்ந்து கொண்டுருந்தது. மணி வேறு எட்டு தாண்டி ஓடிக்கொண்டிருந்தது.இனிமேல் மேன்சன் போயி குளித்து சாப்பிட கெளம்ப ஒரு மணி நேரத்துக்கு மேலே ஆகும், இப்போவே பசியோட இருக்கோமே? பேசாமே சாப்பிட்டு வந்து ஆட்டோ பிடிக்கலாமா’ன்னு யோசித்து கொண்டிருந்த வேளையில் “என்னா சார் இங்கன நிக்கிறிங்க, ரூம்’க்கு தானே போறீங்க, கையிலே ஹெல்மெட் வைச்சிட்டு ஆட்டோ கேக்கீறீங்க? பைக் ரிப்பேர்’ஆ? வாங்க நானும் ரூம் தான் போறேன், ஆட்டோவிலே போகலாம்’ன்னு மேன்சன் இம்சை FM கூப்பிட்டதும் முருகேசனுக்கு அப்பாடா என்றிருந்தது.

கோரமங்களாவில் அமைந்துள்ள பேச்சிலர் மேன்சனில் இரண்டாவது மாடியில் இரண்டு பேர் தங்கும் அறையில் இந்த இம்சையோடு தங்கும் அபாக்கிய நிலைமை முருகேஷனுக்கு ஏற்பட்டு மூணுவாரம் ஆகுது. ரூம் மேட் அரவிந்த் அமெரிக்க ஆன்சைட் முணு மாசந்தாண்டா’ன்னு சொல்லிட்டு போனதிலே இருந்து இந்த இம்சைதான் கூட தங்க ஆரம்பித்தது. ஆரம்பத்தில் மேன்சன் ஓனரால் வந்து அறிமுகப்படுத்தபட்ட போது மிகவும் அமைதியாக இருந்த மனுசனின் சுயரூபம் மறுநாள் நைட்தான் தெரிந்தது.புல் மப்பில் வந்து உங்க பேரு முருகேஷனா, சந்திரமுகியிலே ரசினி வடிவேலுவே கூட முரூகேஸா’ன்னு கூப்பிடுவாரு, நானும் அப்பிடியே ஒங்களை கூப்பிடவா’ன்னு கேட்டதும் முருகேஷனுக்கு பத்திக்கொண்டு வந்தது. பேசமா தூங்குங்க, சும்மா டிஸ்டர்ப் பண்ணாதீங்கன்னு கத்திவிட்டு ரூம் கதவை சாத்திவிட்டு தூங்கினதுதான் இம்சைக்கிட்டே பேசிய கடைசி முறை.

“செல்வம், நீங்க எங்க இங்கிட்டு வந்தீங்க”

“ஓ, நான் என்ன வேலை பார்க்கிறேன்னு கூட ஒங்களுக்கு தெரியாது’லே? நான் எலக்ட்ரிசியன்’ஆ இருக்கேன், இங்க ஊரெல்லாம் பிளாட் கட்டிக்கிட்டு இருக்கிற அந்த பில்டர்ஸ்’கிட்டே காண்டாரக்ட் வொர்க் பண்ணுறேன், அல்சூருலே ஒரு வேலை, ஆபிஸிலா வந்ததுனாலே ஆட்டோதான், எனக்கு என்னோமோ ஊரே தெரியாதமாதிரி கோரமங்களா போறதுக்கு MG ரோடு வழியா போறான் இந்த ஆட்டோகாரன்’ன்னு சொன்ன செல்வத்தை ஒரு மாதிரியாக பார்த்தான் ஆட்டோகாரன்.

“ஆஹா, இம்சை தேவையில்லாமே பிரச்சினையே கிளப்புதே? நீங்க சாப்பிட்டாச்சா’ன்னு பேச்சுக்குதான் கேட்டான் முருகேஷன்.

“இல்லீங்க, நான் டெய்லி ரவுண்ட் விடாமே சாப்பிடுறது’லாம் இல்ல, நம்ம ரூம்கிட்டேயிருக்கிற பார்’லே குவார்டர் வாங்கி சாத்திட்டு தான் ஏதாவது சாப்பிடனும், தம்பி நீங்க தண்ணியடிப்பீங்களா?”

“ஹ்ம்ம் நான் டீ டோட்டலர்’னு சொல்லி இவனுக்கு என்னத்த விளங்க வைக்கிறதுன்னு ஹிம் அடிப்பேன் அடிப்பேன்’ன்னு வெறுப்பாக சொன்னான் முருகேஷன்.

“அப்போ இன்னிக்கு போலாமா? இந்தா நம்ம ரூம் வந்தாச்சு, வாங்க அப்பிடியே அடிச்சிட்டு உள்ளாறே போயிறலாம்’ன்னு கூப்பிட்ட இம்சைசெல்வத்தை அனுப்பி வைத்து விட்டா போதுமிடா சாமி’ன்னு பக்கத்து ரூம் மல்லுவிடம் சொல்லி பார்சல் வாங்கி வரச்சொல்லி குளித்து சாப்பிட்டான், மணி பதினொண்ணை தாண்டிய பொழுதில் புல் மப்பில் உள்ளே நுழைந்து இம்சை.

“தம்பி, என்ன இன்னும் தூங்கலையா? என்னமோ படிச்சிட்டு இருக்கீங்க போலே? ஹிம் பெரும் படிப்பு படிச்சவக, இங்கிலிசு பொஸ்தகமெல்லாம் படிக்கீறீங்க, நாங்கெல்லாம் சாதாரணமான ஐடிஐ தானே? எதாவது நானெல்லாம் படிக்கிறமாதிரி பொஸ்தகம் படிக்க கொடுங்களேன்’ன்னு கேட்டு புக் செல்ப்’ஆக இருந்த டிரெஸ் வைக்கும் செல்ப்’ஐ நோண்ட ஆரம்பித்தது இம்சை.

“என்ன தம்பி, பொஸ்தகம் பேரே மார்க்கமா இருக்கு, என்ன காமக் கடும்புனலா? அப்பிடின்னு ஒரு பொஸ்தகத்துக்கு பேரா’ன்னு போதையில் இருந்தாலும் தெளிவாக புத்தகத்தை படிக்க ஆரம்பித்தது.

“ஹிம் படிச்சி பாருங்க, சில கவிதைகள் ரொம்பவே ரசிக்க வைக்கிற அளவுக்கு இருக்கும்”

“தம்பி,புணராமல்’ன்னா என்ன அர்த்தம்’ன்னு கேட்ட செல்வத்தை ஒரு மாதிரியாக தான் பார்த்தான் முருகேஷன்.

“ஹலோ, அது என்னான்னு தெரியாதா? அது சுத்த தமிழிலே மேட்டரு’ன்னு அர்த்தம்.”

“ஹிம் அப்போ சரி தான்”

“எது?”

அத்தனை வேதனைகளுக்கும் ஒரே காரணம்,
புணராமல் இருக்கமுடியவில்லை என்ற நிலைதானே.

“இந்த கவிதைதான்”

“செல்வம் ஒங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சா? ஒங்க வொய்ப் எங்க இருக்காங்க? நீங்க எதுக்கு இங்கயீருக்கீங்க?”

“ஹிம் ஆகிருச்சுப்பா, ஆகி ஒரு வருசத்துக்கு மேலே ஆக போகுது, நான் எங்க சொந்த ஊரு சேலத்திலே EB’லே காண்ட்ராக்ட்’லே லேபரா இருந்தேன், வினைக்குனே எங்க அக்கா மவளே கலியாணம் பண்ணி வைச்சாங்க, மொத ராத்திரி அன்னிக்குதான் தெரிஞ்சது, அவ யாரோயோ லவ்வு பண்ணுறான்னு என்னை தீடிரென்னு அவளுக்கு கட்டிட்டாங்கன்னு!. போயி தொட்டா அழுவுறா, இப்போவே செத்து போயிருவேன்னு அழுது சாதிக்கிறா, அதுக்கு மேலே நாமே என்ன செய்யமுடியும்? கவிதையிலே இருக்க’கிற வார்த்தை தவிர்த்து வாசிச்சா எனக்கு சரியா இருக்கும்’னு போதையிலே இருந்தாலும் தெளிவாக பேசிய செல்வத்தை வெகு ஆச்சரியமாக பார்த்தான் முருகேசன்.

“சரி அதுக்கப்புறம் சமாதானம் ஆகலயா?”

“எங்கே நான் அங்கயிருந்தா இதிலே சண்டை வருதுன்னு நானும் இந்தா ஊரை விட்டு வந்து நாலு மாசமா போவுது, வாரம் தவறாமே போயி பார்த்துட்டு வந்துறேன், எங்க அப்பன் ஆத்தா’க்கு தான் ஏதோ சந்தேகம் வந்து என்னை மாதிரியா பார்க்கிறாங்க, ஆனா எம்பொண்டாட்டி’க்கு தான் புரியவே மாட்டங்கிது’னு சொன்ன செல்வத்தின் கலங்கிய கண்களை கவனித்தான் முருகேஷன்.

“சரி செல்வம், இப்போ தூங்குங்க, வேற எதுவும் பேசவேணாம்”

அடங்காத காமத்துடன் தவித்துக்கொண்டிருக்கிறேன்
உனக்கோ அழ்ந்த அயர்ந்த உறக்கம்
விடிந்ததும் எப்படியாவது உன் வாயைப் பிடுங்கி
ரெண்டு அறை விடுவேன்

“இந்த கவிதைய படிச்சதும் நானெல்லாம் எத்தனி ரெண்டு அறை விட்டுருக்கனும் தெரியுமா தம்பி’ன்னு காலையில் குளித்து வந்ததும் கேட்ட செல்வத்தை பார்த்ததும் மிகவும் பரிதாபமாக இருந்தது, வயது முப்பது தாண்டி மூணு - நாலு வருசம் இருக்குமுன்னு தாடையிறக்கதிலும், காதுக்கு மேலே வெள்ளி முடி துளிர்ந்ததிலும் தெரிந்து கொண்டான் முருகேஷன், அதுவும் இந்த புக்’ஐ வரிக்கு வரி படித்து கொண்டுருக்கும் செல்வத்தை பத்தி என்ன நினைப்பதுமின்னு குழப்பமடைந்தான்.

“தம்பி நேத்து நைட் போதையிலே ஏதுவும் அதிகமாக பேசிட்டோனா?”

“அதெல்லாம் இல்ல செல்வம், ஒங்க கஷ்டத்தை சொன்னீங்க அவ்வளவுதான்’ன்னு பரிதாப பார்வையோடு சொன்னான் முருகேஷன்.

“சரிப்பா, நான் வேலைய முடிச்சிட்டு சாயங்காலமா ஊருக்கு போயிட்டு திங்கக்கிழமை’லே வாறேன்னு சொல்லிவிட்டு செல்வம் கிளம்பியதும் தானும் அலுவலகம் செல்ல வேண்டி கழுத்திலே மாட்ட வேண்டிய பட்டை,பள பள’ன்னு ஷீ, சாயம் போன கலரிலே டிரெஸை மாட்டிக்கொண்டு ஆட்டோவுக்கு தவம் கிடைக்கலான்.

“ஹலோ, அரவிந்த் நம்ம ரூம்’லே ஒரு ஓட்டை FM இருக்குன்னு சொன்னேன்’லே, அது கதையே நேத்து நைட் சொன்னுச்சு, அவரை பார்க்கவே பரிதாபமா இருக்குடா”

“ஹிம், ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்டம்”ன்னு அரவிந்த் அமெரிக்கவில் இருந்து கொண்டு செல்வத்திற்கு பரிதாபப்பட்டான்.

திங்கக்கிழமை விடிந்த பொழுதிலே ரூம்க்கு வெளியே சத்தம் கேட்பதை கேட்டு கண் விழிந்து கதவே திறந்து பார்த்தான் முருகேஷன், செல்வந்தான் பக்கத்து ரூம் மல்லுவிடம் மல்லு கட்டி கொண்டிருந்தான்.

“செல்வம், நீங்க மொதல்ல உள்ளே வாங்க, எதுக்கு அவன்கிட்டே சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க?”

“தம்பி, ஊருலே இருந்து வந்ததும் இவன் மூஞ்சியிலே முழிச்சிட்டோமேன்னு எப்பிடியிருக்கே சேட்டா’ன்னு கேட்டேன், என்னாமோ என்னை விசித்திர பிராணியை பார்க்கிறமாதிரி பார்த்துட்டு குடிகாரன், லூசு மாதிரி உளறவன்’ன்னு மாதிரி மலையாளத்திலே முணங்கிட்டு போறான், எனக்கு என்ன மலையாளமா தெரியாது?”

மறுபடியும் செல்வம் ஊருக்குள் போயி பிரச்சினைய வளர்த்து வந்தது தெரிந்தது, அதுதான் அந்த கோபத்தை இங்கே காட்டிக்கொண்டிருக்கிறார் எனவும் புரிந்து கொண்டான்.

“சரி பஸ்’லே வந்த அலுப்பு இருக்கும், கொஞ்சம் நேரம் தூங்குங்க, மணி ஆறுதானே ஆகுது, வேலைக்கு போறதுக்கு இன்னும் டைம் இருக்குலே?”

“நீங்க தூங்குங்க தம்பி, நான் பொஸ்தகத்தை படிச்சிட்டு இருக்கேன்’னு காமகடும்புனலை தூக்கி வைத்து வாயில் முணங்கிட்டு இருந்தான் செல்வம்

ஜனனத்தில் உருத்திரண்டு, மணத்தில் ஊர் திரண்டு
இல்லறத்தில் உறவு திரண்டு, துறவறத்தில் அறிவு திரண்டு
மரணத்தில் தூர்ந்து…

இரவு அலுவலகம் முடிந்து அறைக்கு திரும்பும் பொழுது வாசலில் எதிர்ப்பட்ட மல்லு ஒங்கட ஆளு ரொம்பவே குடிச்சிட்டு ரூமிலே சத்தம் விட்டுருக்கு, என்னாண்ட கேளுங்கோ’ன்னு அழகு தமிழில் சொன்னதும் விருவிருவென படியேறி ரூம்’க்குள் ஓடினான்.அங்கே கண்ணீர் ஒழுக சரியான போதையில் தனக்கு தானே செல்வம் பேசிக்கொண்டுருந்தான்.

“செல்வம் என்னாச்சு, ஏன் இப்பிடி பண்ணிட்டு இருக்கீங்க?”

“ஆமாம் தம்பி, தப்பு பண்ணிட்டேன், நேத்து வீட்டிலே என் பொண்டாட்டிய நினைச்சிட்டே எங்கம்மா எங்கப்பா எல்லாரையும் கண்டமேனிக்கு திட்டிட்டு வந்துட்டேன், அந்த நேரமா வந்த அக்காவை கூட பயங்கரமா திட்டிட்டேன், அவங்களுக்கு என்னோட வேதனை தெரியாது, எதுக்கு திட்டினேன்னும் தெரியலை, என்ன சொல்லிலாம் திட்டினேன்னும் தெரியலை’ன்னு அழுது கொண்டே சொன்ன செல்வத்தை நினைத்து இரக்கப்பட்டான் முருகேஷன். இந்த சம்பவத்திற்கு பிறகு தினமும் போதை உச்சக்கட்டத்தினுடே ரூம்’க்குள் வந்த செல்வத்தை ஒன்றும் சொல்லவே இல்லை. போதையிலும் என்னோட மனசை புரிஞ்சுப்பா,அவளுக்காக தான் எதுவும் இன்னமும் செய்யமே இருக்கேன்’ன்னு சுயபட்டயம் வாசிச்சு கொண்டே இருப்பார்.

“ஹலோ, முருகேஷனுகளா, நானு செல்வராஜ் சம்சாரம் பேசுறேங்க, கொஞ்சம் அவர்கிட்டே போனை கொடுக்கீறிங்களா’ன்னு மொபைலில் கால் செய்த செல்வம் மனைவியிடம் அவர் இன்னும் ஆபிஸிலே இருந்து வரலை, வந்தா ஒங்க பக்கத்து வீட்டு நம்பருக்கு கால் பண்ண சொல்லுறேன்’னு போனை துண்டித்தான். அடுத்த அரை மணி நேரத்தில் மப்பில் வந்த செல்வமிடம் சொன்னதும் ஏன் போன வாரம் போயி கொடுத்துட்டு வந்த காசு தீர்ந்து போச்சா’ன்னு அவளே திரும்ப பண்ணட்டும்’ன்னு பெட்’லே போயி படுத்துறங்கி விட்டான் செல்வம்.

அடுத்து இரண்டு நாட்களாக செல்வத்தை காணாத முருகேஷன் எப்பிடியோ செல்வம் சம்சாரம் அவரை போனிலே பிடிச்சு ஊருக்கு வரசொல்லிருச்சு போலே? இந்தாளு ஊருக்குள்ளே பண்ணிட்டு வந்த கலாட்டா’விலே குடும்ப பிரச்சினை எதுவும் வந்திருக்கும், அதுதான் அங்க போயிட்டாருன்னு தனக்கு தானே நம்பிக்கொண்டிருந்தான் முருகேஷன், அடுத்த இரண்டு தினங்களுக்கு பிறகு தீடிரென்னு நைட் பத்து மணிக்கு போதை இல்லாமல் வந்த செல்வத்தை பார்க்கவே மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

“என்ன செல்வம், சொல்லாமே கொள்ளாமே எங்க போயிட்டிங்க?”

“ஆமாம் தம்பி, அன்னிக்கு அவ போன் பண்ண இல்ல? எங்கம்மா’வுக்கு கொஞ்சம் ஒடம்பு சரியில்லையாம், அதுதான் மறுநா காலையிலே நான் வேலை பார்க்கிற சூப்பிரெண்ட்’கிட்டே மறுக்கா போன் பண்ணி சொல்லியிருக்கா, நானும் ஊருலே போயி நாலு நாளு இருந்துட்டு வந்தேன், தம்பி இன்னொன்னு நான் எங்க ஊருக்கே போகப்போறேன்ப்பா, இந்த வேலையெ விடப்போறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன், அவங்க நாளைக்கு ஒரு நா வேலைய முடிச்சிட்டு காசை வாங்கிட்டு கிளம்ப சொல்லிட்டாங்க’ன்னு சொன்ன செல்வத்தை வெகுவான ஆச்சரியத்தோடு பார்த்தான் முருகேஷன்.

“தம்பி நீங்க கேட்க வர்றது எனக்கு தெரியுது, என்னோட பொண்டாட்டி புரிஞ்சுக்கிட்டாப்பா!! நான் இவ்வளவு நா அமைதியா இருந்ததுக்கு பலன் கிடைச்சிருச்சு, அப்பிடியே இன்னிக்கு நைட் வந்து ஒங்கக்கிட்டெ சொல்லிட்டு காலையிலே போறப்பவே பேக் தூக்கிட்டு வேலைக்கு போயி எல்லாத்தையும் முடிச்சிட்டு ஊருக்கு கிளம்புறேன், அப்புறம் இன்னொன்னு இந்த புத்தகத்தை நான் எடுத்துக்கலாமா’”

“ஓ தாராளமா எடுத்துக்கோங்க! நல்லப்படியா வாழ்க்கைய ஆரம்பிச்சதுக்கு வாழ்த்துக்கள்”ன்னு சொன்னதும் செல்வத்துக்கு பெருமை பிடிபட வில்லை. நைட் கொஞ்சம் நேரமும் தன்னுடைய படிப்பு, அதற்கப்புறம் வேலை, எப்பிடி கல்யாணம் நடந்தது எனவும் சொல்லிவிட்டு வீட்டு அட்ரஸ் குறிச்சு வைச்சுக்கோங்க, கட்டாயமா ஊருக்கு வரனுமின்னு தூங்கிபோனான் செல்வம். அதன்பின்னர் தன்னுடைய வழக்கமான அலுவலில் எல்லா விஷயங்களுக்கும் மறந்து போனான் முருகேஷன். ஆறு மாதங்களுக்கு பிறகு தன்னுடைய டீம் மேட் ஒருத்தன் கலியாணம் சேலத்தில் நடக்கும் சமயத்தில் செல்வத்தையும் பார்த்துட்டு வரலாமின்னு அவன் கொடுத்து சென்ற அட்ரஸ் காகித்தை எடுத்து வைத்து கொண்டு கல்யாணம் முடிந்ததும் செல்வத்தை தேடிப்போனான். சேலத்தின் நகரை விட்டு கொஞ்சம் தள்ளி வெகு சாதரண குடியிருப்பு பகுதியில் அவன் வீடு கண்டுபிடிக்க கொஞ்சம் கஷ்டமா தான் இருந்தது.

“செல்வம் அண்ணா? செல்வம் அண்ணா’ன்னு வீட்டுக்கு வெளியே நின்னு சத்தம் விட்ட முருகேசனை மெதுவா எட்டி பார்த்தாள் வயதான பெண்மணி.

“அம்மா நானு செல்வம் பெங்களூரூலே தங்கியிருந்தப்போ கூட தங்கியிருந்தேன் என்னோட பேரு முருகேஷன்’ன்னு சொல்லி அறிமுகப்படுத்தி கொண்டான்’

“ஓ நீங்கதானா தம்பி அது, வாங்க உள்ளுக்குள்ளே என தீடீரென்னு கண் கலங்கிய செல்வம் அம்மாவை பார்க்க வித்தியசமாக இருந்தது.

“என்னாம்ம்மா என்னா ஆச்சு? எதுக்கு கண் கலங்குறீங்க?”

“தம்பி, என்னோட செல்வம் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி விஷம் குடிச்சி செத்து போயிட்டான்ப்பா, பாவிப்பய ஊரிலே இருந்து வந்ததிலே இருந்து கொஞ்சநாளு நல்லாதான் இருந்தான், என்ன ஆச்சோ தெரியலை, தீடீரென்னு பேயி பிடிச்சமாதிரியே கொஞ்சநாளு இருந்தான், தீடீரென்னு விஷத்தை குடிச்சி செத்து போயிட்டான், எங்களை விட்டு பிரிஞ்சு போன புள்ள திரும்ப வந்துருச்சேன்னு சந்தோஷமா இருந்தேன், ஆனா கொஞ்சநாளிலே எங்களை விட்டு ஒரேடியா பிரிஞ்சே போயிட்டான்னு அழுது கொண்டிருதார் செல்வம் தாய்.

அறைக்குள் இருந்து கலங்கிய கண்களோடு நிறைமாத கர்ப்பிணியாக வெளியே வந்தாள் செல்வம் மனைவி. கேட்கவே கஷ்டமா இருக்கும்மா, நான் கிளம்புறேன் சொல்லி விட்டு வெளியே வந்தான் முருகேஷன்.

முடிவே தெரியாத ஒன்றை
முடிக்கத் தெரியவில்லை
முடிவற்று நீளும்
முடிவற்றவைகளால்
முடியப்பட்டிருக்கிருக்கின்றன
முற்றும்.

கவிதைகள்:- நா.மகுடேஷ்வரனின் காமக் கடும்புனல்

செப்டம்பர் 27, 2007

சவடன் கதை

“யே ஆத்தா, எங்க சவடப்பச்சியை விடிக்காலே இருந்தே காணேலே? எங்கன போயிருக்கு?”ன்னு வீட்டுக்கு வெளியே நின்னு கேட்ட புள்ள யாருன்னு பார்க்க கண்ணை குருக்கிக்கிட்டு வீட்டை வெளியே வந்துச்சு பர்வதப்பத்தா.

“வாடியாத்தா, மருதமீனாட்சி, என்னாத்துக்கு அப்பச்சிய தேடி வந்தே?”

“அப்பத்தா என்னோட பேரு மீனாட்சி தான், சுருக்குன்னு மீனா’ன்னு கூப்பிடு, அப்போதான் இஸ்டைலா இருக்கும்”

“என்னடியாவேளெ சுடல, சுட்டுருச்சுன்னு சொல்லிக்கிட்டு இருக்கேவே, அவன் மருதக்கு போயிருக்கான், கருக்கலிலே போனான், இன்னும் வந்த சேதிய காணாம். என்னா சொல்லனும்?”

“நான் என்ன அப்புச்சி’கிட்டே சேதி சொல்லப்போறேன். சொக்கய்யா தான் பார்த்துட்டு வர சொன்னுச்சு”

“சரி அவன் வந்தா சொல்லிவிடுறேன். சொக்கன் சொல்லிதான் அவன் டவுனுக்கு போயிருக்கான்னு நினைச்சி கிடந்தேன்.”

“வந்தா சொக்கய்யா கடைக்கு வரசொன்னுச்சு’ன்னு சொல்லிருப்பத்தா, நானு கம்மா’கிட்டே பாண்டியாட போறேன், நான் இங்கன வந்தேன்னா எங்கம்மா வந்து கேட்டுச்சு’ன்னா சொல்லிரு”ன்னு சொல்லி விட்டு ஓடி விட்டாள்.

கலியாணம் ஆன ரெண்டேமாசத்திலே சீக்கு வந்து செத்துப் போன புருசன் வீட்டிலே இருந்து தம்பி சவடன் வீட்டிலே தங்கினவ தான் பர்வதத்தா. இப்போ வயசு அறுவதஞ்சு தொட்டுருச்சிக்கிறதுக்கு பார்க்கிற பார்வைக்கு கண்ணை குறுக்கி ம